Take a fresh look at your lifestyle.

நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! – ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி

24

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.

ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.
விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.

3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.

பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா இன்று (நவம்பர் 25) சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளப்பங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

 ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன் தீவிர விஜய் ரசிகர் என்பதால் அவர்  மேடையில் பேசும்பொழுது விஜய்யை பற்றிய கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. 

“நடிகர் விஜய்க்கு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாரே” என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, “விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக இருக்கும் போது அவருக்கு விருது வழங்க வேண்டும், என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தான் என்னை இந்த துறையில் பயணிக்க வைத்திருக்கிறது. அதேபோல், அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக  அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன். அதற்கான உயரத்தை அடைய நானும், என் நிறுவனமும் கடுமையாக உழைப்போம்.” என்று அவர் உவகையுடன் பேசினார்.