Take a fresh look at your lifestyle.

கஸ்தூரி தெலுங்கானாவில் கைது

28

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அங்கு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

 

அதாவது, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?” என்று பேசியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த கருத்து தான் சர்ச்சையானது. அவர் தெலுங்கு பேசும் மக்களை இழிவுப்படுத்திவிட்டதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல இடங்களில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை எழும்பூர் போலீசார் சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தான் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

நடிகை கஸ்தூரிக்கு தெலுங்கு சினிமா துறைக்கும் தொடர்பு உள்ளது. இதனால் நடிகை கஸ்தூரி ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் தான் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கஸ்தூரி பதுங்கிய இடத்தை அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் கைதான கஸ்தூரியை ஹைதராபாத்தில் கைதான கஸ்தூரியை எழும்பூர் தனிப்படை போலீசார் சாலை மார்க்கமாக காரில் சென்னை அழைத்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அழைத்து வரும் போலீசார் அவரை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.