சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் திமுக அரசு” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கூறியதாவது, “ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று திமுக முதல்வர் சொல்லி ஒரு நாள் கூட ஆகவில்லை, நேற்று இரவில் போதையில் ஒருவர் மாமூல் கேட்டு தாக்கியதில் பெண் உயிரிழப்பு! இன்று அவர் தந்தை பெயரில் உள்ள மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக் குத்து! “பாலாறும் தேனாறும் ஓடும்” என்றவர்களின் ஆட்சியில் உண்மையில் ஓடுவது இரத்த ஆறு தான் என்றாலும் மிகையாகாது.