உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.

‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் போன்ற பல மாவட்டங்களை மழை பெருமளவு பாதித்தது. ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிக்கிவிடுகிறது.

வெள்ளம் சில மாவட்டங்களில் வடிந்துவிட்டாலும் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது வடியவில்லை. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் பேரிடர் மீட்புப் பணி குழுவினரால் காப்பாற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளம் பாதித்த இடங்களை சரி செய்யவும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் ரூ.2000 கோடி நிவாரண நிதி வேண்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து, இம்மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுதவிர மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்துள்ளார்.

 

Comments (0)
Add Comment